சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கல்லூரியில் தேர்வுப் பணிக்காக வந்திருந்த ஓர் ஆசிரியர் தான் தென்னாப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்குக் கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று நோயாளி களுக்குச் சிகிச்சையளித்துச் சேவை செய்து கொண்டிருந்த கியூபா நாட்டு மருத்துவர்களைக் கேலியாகப் பேசியது இன்றும் என் நினைவில் உள்ளது. பிறகு நான் கியூபாவுக்குச் சென்றபோதுதான் அவர்களது சுகாதாரத் துறையைக் குறித்தும், அந்தத் துறையில் அவர்கள் உயர்த்திப் பிடிக்கிற மாண்புகளைக் குறித்தும் கூடுதலாக அறிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான், இன்று உலகம் கொரானா பீதியில் நடுங்கும்போது அந்த நோய் பாதித்த பல நாடுகளுக்குக் கியூபாவின் திறமையான மருத்துவர்கள் மருத்துவச் சேவைக்காகச் சென்றிருக்கிறார்கள் என்பது சிறிதும் ஆச்சரியப்படத்தக்கதாக இல்லை. புரட்சிக்குப் பிறகு உலகில் எந்த நாட்டிலும் ஏற்படாத விதத்திலான மாற்றங்கள் கியூபாவின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டது. 1959-ன் புத்தாண்டு பிறந்தவேளையில் கியூபாவின் புரட்சி வெற்றி பெற்றபோது அந்நாட்டில் பத்தாயிரம் பேர்களுக்கு ஆறு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். உலக சுகாதார அமைப்பின் 2009 முதல் 2018 வரையான மிகவும் புதிய கணக்கின்படி உலகில் எந்த நாட்டிலும் இல்லாதவாறு கியூபாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 81. 9 மருத்துவர்கள் உள்ளனர். இந்தியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 7. 8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்காவில் பத்தாயிரம் பேர்களுக்கு 25. 9 மருத்துவர்கள் உள்ளனர். மற்ற நாடுகளைவிட கியூபா சுகாதாரத் துறையில் முன்னணியில் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
நம்ப முடியாத அர்ப்பணிப்பு
இலவச சுகாதாரப் பாதுகாப்பு பற்றி ‘ராயல் ஆஸ்திரேலியன் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிராக்டீஷனர்ஸின்’ முன்னாள் தலைவர் கோலின் ஹூஸ் தனது ஒரு மாணவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறார். ஒருசமயம் கியூபாவுக்குச் செல்லவேண்டிவந்த அந்த மாணவனுக்குப் பயணத்திற்கிடையே மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிக்கலான அவசரச் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வந்ததைப் பற்றியும், கியூப மருத்துவர்கள் அந்தச் சிகிச்சையை இலவசமாகச் செய்து உதவியதைப் பற்றியும் கோலின் ஹூஸ் மிகுந்த பாராட்டுதலுடன் கூறினார். சுகாதாரத் துறையில் கியூபா பெற்றுள்ள பெருமைப்படத்தக்க முன்னேற்றத்தைப் பற்றியும் அவர் விவரித்தார்.
அமெரிக்க நலத்துறையின் தலைவராக இருந்த வெய்ன் ஸ்மித் கியூபாவின் சுகாதாரத் துறையைப் பற்றி உரையாற்றுகையில், “நம்பமுடியாத அர்ப்பணிப்பு மனோபாவம்” என்று சிறப்பித்துக் கூறினார். அது சரிதான். அதுதான் கியூபா முன்மாதிரியின் வெற்றி ரகசியம். அதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்நாட்டில் மருத்துவர்களைத் தேர்வு செய்யும் முறையையும் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவ அறிவியல் சம்பந்தமான விஷயங்களில் நல்ல மார்க் பெறுவதால் மட்டும் எவரும் மருத்துவம் படிக்க முடியாது. அதற்கு உங்களுக்கு இருக்க வேண்டிய தகுதியை முதலில் தீர்மானிக்க வேண்டியவர்கள் உங்களது நண்பர்களும் ஆசிரியருமாவர். மருத்துவச் சேவையில் உங்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளதென்பதை நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உணர்த்துவதுடன், அவர்கள் உங்களை மருத்துவப் படிப்புக்காகப் பரிந்துரைக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், மருத்துவச் சேவைக்கான மிகவும் முதலாவது தகுதியாக இருப்பது கியூபாவைப் பொறுத்தவரை சேவைக்குத் தேவையான அர்ப்பணிப்பு உள்ளமாகும்.
மருத்துவக் கல்வி - முற்றிலும் இலவசம்
கியூபாவில் முற்றிலும் இலவசக் கல்வி என்பதால் பணம் என்பது ஒரு தடையே அல்ல. அதனால், மருத்துவச் சேவை அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வழியும் அல்ல. மாறாக, அவர்களை வழிநடத்துவது, “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த விசாரணை உரை ஒன்றில் தமது தேசத்து
மக்களின் ஆரோக்கிய நிலை குறித்தும், அவர்களது கொடிய வறுமை குறித்தும் புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ கவலைப்பட்டது போல், புரட்சிப் போரில் தமது தோழரும் மருத்துவருமான சே குவேராவின் நிபுணத்துவ ஆலோசனையில் கியூபாவின் சுகாதாரத்துறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது. மத்திய கியூபாவின் முக்கிய நகரமாகிய சாந்தாகிளாராவுக்கு அருகில் உள்ள ராஞ்சாலோ என்ற கிராமத்தின் வாலன்ஸியா குடும்பத்துடனான சில நாள் பழக்கத்தில் அவர்களின் ஆரோக்கிய நிலைகளைப் பற்றி வழங்கிய ஆழ்ந்த ஆலோசனைகளை எளிதில் மறக்க இயலாது. அந்தக் குடும்பத் தலைவனாகிய கார்லோ ஒருநாள் இரவு வயிற்று வலி அதிகரித்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஏற்கெனவே ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ள கார்லோவுக்கு உணவு விஷயத்தில் கடும் கட்டுப்பாடு இருந்தது. ஆனால், என்னை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி மறுநாள் காலையிலேயே அவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். மருத்துவமனையில் போதிய இடம் இல்லாததால்தான் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்று நமது ஊர் அனுபவத்தில் கருதியிருந்தேன். அந்த மருத்துவமனையைக் காணவேண்டுமென்று அதிக ஆவலுடன் குடும்பத்தின் இளம் தலைமுறைப் பெண்மணியாகிய லீயானியுடன் நான் அங்கு சென்றபோது ஒரு நோயாளிகூட இல்லாமல் அறைகள் காலியாக இருந்ததைக் கண்டேன். அன்று மாலை கார்லோவைப் பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றபோது அங்கு சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். அவர் ஒரு பெண் மருத்துவர். கார்லோவிடம் அவர் விவரங்கள் கேட்டறிந்த பிறகு, குடும்ப உறுப்பினர்களையெல்லாம் கூட்டிவைத்து முக்கால் மணிநேரம் ஒரு நீண்ட வகுப்பு நடத்தினார். அவரது நோயைப் பற்றியும், அவர் உண்ண வேண்டிய உணவு பற்றியும், உண்ணக் கூடாதவை பற்றியும், மருந்து பற்றியும் மிக விரிவாக விளக்கிக் கூறினார்.
அந்தப் பெண் மருத்துவரின் வருகையும், வீட்டுக்காரர்களுடன் அவர் இதமாக உரையாடியதும் வீட்டுக்காரர்களுக்கும், நோயாளி கார்லோவுக்கும் ஏற்படுத்திய நம்பிக்கை மிகப்பெரிதாகும். ‘இந்தியர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தியது எனக்கு ஒரு வெகுமதிபோல்’ என்று பெருமையுடன் சொல்லி அவர் புறப்படும்போது புகழ்பெற்ற கியூப மருத்துவரை நேரில் பார்க்க முடிந்தது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. மறுநாள் காலை கார்லோவ் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களுடன் பக்கத்து வீட்டுக்காரர் வந்ததைப் பார்த்தேன்.
குடும்ப மருத்துவர் ஏற்பாடு எப்படிச் சாத்தியமானது?
கியூபாவில் எப்படி இவ்வளவு பெரிய ஒரு ‘குடும்ப மருத்துவர் ஏற்பாட்டை’ நடத்திச் செல்ல முடிகிறது என்பதற்கு ஒரே பதில் கியூபாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதுதான். இதற்கு அவர்களுக்கு உதவுவது 21 மருத்துவக் கல்லூரிகள். அவர்களின் மருத்துவக் கல்வியைத் தனிச்சிறப்பு மிக்கதாக ஆக்குவது அங்குள்ள உலகின் மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக் கழகமாகும். இது ஒரு சர்வதேசப் பல்கலைக் கழகம். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த இருபதாயிரம் மாணவர்கள் வரை இங்கே படிக்கிறார்கள். படிப்பு முழுவதும் இலவசம்! படிப்புடன் இரண்டு ஆண்டுகள் ஆரம்ப சுகாதாரத் துறையில் அவர்கள் பணியாற்ற வேண்டும். அது, தன்னார்வ சேவையைத் திடமாக உறுதிசெய்கிற காலகட்டமென்று பல்கலைக் கழகத்தின் பராகுவேயைச் சேர்ந்த ஹோவான சௌரஸ் கூறுகிறார். வளர்ச்சி பெற்ற நாடுகளில் உள்ளது போல் அதிகமான படிப்புச் செலவு கியூபாவில் இல்லாததனால் மாணவர்கள் மனஅழுத்தம் இல்லாமல் படிக்க முடிகிறது. அதனால்தான் ஆரம்ப சுகாதாரத் துறையின் சேவையைத் தங்களால் சிறப்பான முறையில் நிறைவேற்றவும் முடிகிறது என்று மாணவர்கள் தங்களின் அனுபவ வெளிச்சத்தில் கூறுகிறார்கள்.
வெள்ளைப் பட்டாளம்
கியூபாவின் வெள்ளை உடை அணிந்த வெள்ளைப் பட்டாளம் இந்தக் கொரானா காலத்தில் 7 நாடுகளில் தன்னார்வ மருத்துவச் சேவையாற்றச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இது காலங்காலமாகச் செய்துவரும் சேவைப் பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியாகும். சுயநலமில்லாச் சேவையின் மூலம் லத்தீன் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்கா விலும், ஐரோப்பாவிலும், ஆசியாவிலுமாக பொருளாதாரத்திற்கும் மொழிக்கும் அரசியலுக்கும் அப்பால் மனித நேயத்தை முன்வைக்கிற அவர்களுக்கு 7 நாடுகளுக்கான மருத்துவச் சேவை ஒருபோதும் இறுதியானதாக இருக்காது. தங்களின் பிரியத்திற்குரிய தோழர் சே குவேராவின் மார்பின் மீது துப்பாக்கி ரவை பாய்ச்சிய மாரியோ டெரான் என்ற பொலிவியன் இராணுவத்தினனுக்குப் பார்வை சக்தியைத் திருப்பி வழங்கிய கியூபா மருத்துவர்கள் கட்டுப்பாடற்ற சேவையைத் தங்களின் இலட்சியமாய் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது சேவையின் உச்சமான முன்மாதிரி மூலமாகத் அவர்களின் பிரியத்திற்குரிய ஃபிடல் காஸ்ட்ரோவும் சே குவேராவும் காமிலோவும் மனிதரின் இதயங்களில் என்றென்றும் ஜீவித்திருப்பார்கள்!
நன்றி: தேசாபிமானி (மலையாள நாளிதழ்) 27.3.2020
தமிழில்: தி.வரதராசன்